ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த சீசனை மும்பை அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே அதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இந்த 3 ஆட்டங்களிலுமே அந்த அணி இலக்கை துரத்தி வீழ்ந்துள்ளது. தோல்வி அடைந்த 3 ஆட்டங்களில் இரண்டை சிஎஸ்கே, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியிருந்தது.
180 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலே சிஎஸ்கே அணி அதை எட்டிப்பிடிப்பது என்பது எட்டாக்கனியாக மாறி உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக197 ரன்கள், ராஜஸ்தான்அணிக்கு எதிராக 183 ரன்கள், டெல்லி அணிக்கு எதிராக 184 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் தவித்தது சிஎஸ்கே அணி. இதில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை தவிர்த்து மற்ற 2 ஆட்டங்களிலும் இலக்கை துரத்தும் போது சிஎஸ்கேவிடம் இருந்து எந்தவித போராட்ட குணமும் வெளிப்படாதது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது
வெற்றிக்கான அணிச் சேர்க்கையை கண்டறிவதே சிஎஸ்கேவுக்கு பெரிய இலக்காக மாறி உள்ளது. ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், சேம் கரண் ஆகியோரை நீக்கிவிட்டு டேவன் கான்வே, முகேஷ் சவுத்ரி, விஜய் சங்கர் ஆகியோரை பயன்படுத்திய போதிலும் சிஎஸ்கே அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியவில்லை. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே ஆகியோரது நிலையற்ற பேட்டிங்கும் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
பேட்டிங்கில் பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளாதது, பந்து வீச்சில் பவர்பிளேவில் எதிரணியை கட்டுப்படுத்த முடியாதது ஆகியவை ஆட்டத்துக்கு ஆட்டம் பலவீனமாகி வருகிறது. மேலும் கேப்டன் ருதுராஜ் களவியூகங்களை அமைப்பதிலும் தடுமாற்றம் அடைவது அணியின் பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்களை எந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர், குழப்பம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இது ஒருபுறம் இருக்க சுழற்பந்து வீச்சில் நூர் அகமது மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். சீனியர் வீரர்களான ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரிடம் இருந்து எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல் திறன் இதுவரை வெளிப்படவில்லை.
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரையில் கலீல் அகமது தொடக்க ஓவர்களில் சிறப்பாக செயல்படுகிறார். ஆனால் அவருக்கு உறுதுணையாக வீசுவதற்கு வலுவான வேகப்பந்து வீச்சாளர் இல்லை. மதீஷா பதிரனா நடுஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் சிறப்பாக செயல்பட்டாலும் அதற்கான பலன் இல்லாமல் உள்ளது. பேட்டிங், பந்து வீச்சு பலவீனங்கள் இருக்கும் வேளையில் சிஎஸ்கேவின் பீல்டிங் திறனும் மங்கத் தொடங்கியுள்ளது. நடப்பு சீசனில் 4 ஆட்டங்களில் அந்த அணி 7 கேட்ச்களை தவறவிட்டுள்ளது. மற்ற எந்த அணிகளும் இவ்வளவு அதிகமான கேட்ச்களை கோட்டைவிடவில்லை.
பேட்டிங்கில் கடந்த சீசனில் காயத்துடன் விளையாடிய தோனி கடைசி 2 ஓவர்களில் மட்டும் களமிறங்கிய தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு பலம் சேர்த்தார். ஆனால் 43 வயதாகும் அவர், இந்த சீசனில் ராஜஸ்தான், டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிக பந்துகளை எதிர்கொண்ட போதிலும் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கவில்லை. டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 11-வது ஓவரில் களமிறங்கினார். அப்போது அணியின் வெற்றிக்கு 56 பந்துகளில் 110 ரன்கள் தேவையாக இருந்தது.