‘வரி கட்டலைனா வாசலத் தோண்டுவோம்!’ – அதிகாரிகள் அதிரடி… ஆத்திரத்தில் மக்கள்!

சொத்து வரியை கடுமையாக உயர்த்திவிட்டதாக ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்திப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வரி கட்டாதவர்களின் வீட்டு வாசலை பொக்லைனால் தோண்டுவது, குப்பைத் தொட்டியை வைப்பது, வீட்டை ஜப்தி செய்வதாக மிரட்டுவது என வரியை வசூலிக்க அதிகாரிகள் செய்யும் அதிகபட்ச கெடுபிடிகள் ஆளும் கட்சி மீதான மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்து வருகிறது.

திமுக ஆட்சி பொறுப்​பேற்ற பிறகு சொத்து வரி, தண்ணீர் வரி, பத்திரப்​பதிவு கட்டணம், மின் கட்டணம் உள்ளிட்டவை சுமார் மும்மடங்கு உயர்த்​தப்​பட்​டுள்ளது. அதிலும், வரிகளை எவ்வித முன்னறி​விப்பும் செய்யாமல் ஏற்றி​விட்டு முன் தேதியிட்டு கட்ட வேண்டும் என்று உள்ளாட்சி அதிகாரிகள் கெடுபிடி செய்கி​றார்கள். இந்த நிலையில், வரியை வசூலிக்க உள்ளாட்சி அதிகாரி​களும் ஊழியர்​களும் அத்து​மீறிய நடவடிக்​கை​களில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

பண்ருட்​டியில் நகராட்சி அதிகாரிகள், வரி செலுத்​த​வில்லை என்பதற்காக கடப்பாரை சகிதம் ஒரு வீட்டு வாசலில் போய் நின்றதுடன், அந்த வீட்டின் நுழைவு வாயிலில் பொக்லைனை வைத்து பள்ளம் தோண்டும் முயற்​சியில் இறங்கி இருக்​கி​றார்கள். மதுரை​யில், சொத்து வரி கட்டாத நிறுவனத்தின் வாசலில் குப்பைத் தொட்டியை இறக்கி வைத்து மிரட்டி இருக்​கி​றார்கள்.

காரைக்குடி மாநகராட்​சி​யிலும் வரி கட்டவில்லை என்பதற்காக ஓட்டல் வாசலில் குப்பைத் தொட்டியை வைத்து அராஜகம் செய்திருக்​கி​றார்கள். மாநகராட்​சியின் இந்த நடவடிக்​கை​யை​யும், வரி உயர்வையும் கண்டித்து கடந்த 28-ம் தேதி வணிகர்கள் ஒரு நாள் ஒட்டுமொத்த கடையடைப்புப் போராட்டமே நடத்தி இருக்​கி​றார்கள். சென்னையில் 1,800 ரூபாய் தண்ணீர் வரி கட்டவில்லை என்பதற்காக திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டையே ஜப்தி செய்யப் போவதாக நோட்டீஸ் கொடுத்​திருக்​கி​றார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

உத்தரப்​பிரதேசத்​தில், தவறு செய்தவர்​களின் வீடுகளை அதிகாரிகள் புல்டோசர் வைத்து இடித்தது போல் தமிழகத்தில் வரி வசூலிப்பு நடவடிக்​கையில் அதிகாரிகள் செய்யும் இந்த தடாலடிகள் ஆங்காங்கே அரசுக்கு எதிராக மக்களை கொந்தளிக்க வைத்திருக்​கிறது. உயர்த்​தப்பட்ட வரியை செலுத்​து​வதற்கு தான் மக்கள் தாமதம் செய்கி​றார்கள்.

அதை உரிய முறையில் அவகாசமளித்து வசூலிக்​காமல் இப்படி அதிரடி காட்டுவது நல்லதல்ல என ஆளும் கட்சி​யினரே ஆதங்கப்​படு​கி​றார்கள். “ஏற்கெனவே அரசு ஊழியர்கள் அரசு மீது அதிருப்​தியில் இருக்கும் நிலையில் பொதுஜனத்​தையும் அதிகாரிகள் இப்படி சீண்டி வருகி​றார்கள். இதனால் அரசுக்​குத்தான் கெட்ட பெயர்” என்கி​றார்கள் அவர்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்​கு​மார், “கடிதோச்சி மெல்ல ஏறிக… என்பதுதான் திருக்​குறள் சொல்லும் நீதி. அதாவது வரிவி​திப்​பதும் தெரியக்​கூ​டாது, அதை வசூலிப்​ப​திலும் கடுமையாக இருக்கக் கூடாது. அந்தளவுக்கு மென்மையாக இருக்க வேண்டும். அப்படித்தான் வரி விதிக்க வேண்டும், வரி வசூலிக்க வேண்டும். ஆனால், இவர்கள் செய்வது கொடுங்​கோன்​மையின் உச்சம். சர்வா​திகார அரசாங்​கத்தில் இப்படித்தான் நடக்கும்.

சொத்து வரி, தண்ணீர் வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இவற்றின் மூலமாக கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் வருவாய் வந்திருப்​ப​தாகச் சொல்கி​றார்கள். ஆனாலும் வரி வசூலில் இப்படி அராஜகமான முறையில் நடந்து கொள்கி​றார்கள். சுதந்​திரம் அடைந்து 75 ஆண்டு​களில் தமிழ்​நாட்டின் கடன் ஐந்தரை லட்சம் கோடியாக இருந்தது.

ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் ஒன்பதரை லட்சம் கோடியாக உயர்ந்​து​விட்டது. அந்த அளவுக்கு நிர்வாக திறமையற்ற, மக்களை சுரண்டும் அரசாக இது இருக்​கிறது. தற்போது மக்களை கசக்கிப் பிழிகிற வேலையை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்​கிறது.

வரி உயர்வுகள் மக்களை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்​தார்கள். அந்த குழு என்ன பரிந்​துரைத்ததோ தெரிய​வில்லை. ஆனால், வரி கடுமையாக உயர்ந்​திருக்​கிறது. வசூலிப்பு முறைகளும் அராஜகமாக இருக்​கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்​கி​றோம்” என்றார்.

திமுக தரப்பில் தமிழன் பிரசன்னா, வழக்கறிஞர் சரவணன் ஆகியோரிடம் அதிகாரிகள் கெடுபிடி குறித்து கேட்டதற்கு, “இப்படி​யெல்லாமா செய்கி​றார்​கள்..?” என்று அதிர்ச்​சி​யான​வர்கள், “இதை அரசின் மேல்மட்​டத்தில் உள்ளவர்​களின் கவனத்​திற்குக் கொண்டு செல்கி​றோம்” என்று சொன்​னார்கள். வரி வசூலிப்பில் அதி​காரிகள் அத்​துமீறி நடந்து கொள்ளும் விதத்தை இனியும் அரசு கண்​டு​கொள்​ளாமல் இருந்தால் ஆளும் கட்​சிக்கு மேலும் சிக்கல் ​தான்​!