புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தில் அப்போதைய முதல்வர் பிரேன் சிங்கின் பங்கு இருப்பதாக கூறி சில ஆடியோக்கள் வெளியாகின. இதன் அடிப்படையில் நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குகி இன ஒருங்கிணைப்பு குழு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஆடியோ உரையாடல்களின் நம்பகத் தன்மையை மத்திய தடய அறிவியல் ஆய்வகம் (சிஎப்எஸ்எல்) ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.
இந்நிலையில் சிஎப்எஸ்எல் அமைப்பின் தடயவியல் ஆய்வறிக்கை தயாராக இருப்பதாகவும் விரைவில் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.