கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் | 24 அக்டோபர் 1940 – 25 ஏப்ரல் 2025

அப்போது அவருக்கு முப்பது வயது. திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. வானவியல் துறையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்திருந்தார் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன். வெற்​றி​யில் திளைக்க வேண்​டிய கஸ்தூரிரங்​கன், இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்​துக் கொண்​டிருந்​தார்.

பழம் நழு​வி பாலில் விழுந்​தது போல, உலகள​வில் பெரும் மதிப்​பு​கொண்ட பெர்க்​லி​யில் உள்ள கலி​போர்​னியா பல்​கலைக்​கழகப் பேராசிரியர் லூயிஸ் அல்​வாரெஸின் ஆய்​வகத்​தில், அவருக்கு மிக​வும் பிடித்த வான​வியலில் மேல் ஆய்வு செய்ய அழைப்பு வந்​திருந்​தது.

மறு​புறம், அவர் முனை​வர் பட்​டம் பெற்ற அகம​தா​பாத்​தில் உள்ள இயற்​பியல் ஆராய்ச்சி ஆய்​வகத்​தின் தலை​வர் விக்​ரம் சாரா​பாய், சில மாதங்​களுக்கு முன்​னர் இந்​திய விண்​வெளி நிறு​வனம் (இஸ்​ரோ)வை நிறு​வி​யிருந்​தார். அதில் வந்து சேரு​மாறு அழைப்பு.

எதைத் தேர்வு செய்​வது? அவர் பொறி​யியல் மாணவன் அல்ல. எனவே பெரும் தயக்​கத்​தில் இருந்​தார். மேலும், இஸ்​ரோவை நிறுவி ஒரு சில மாதங்​களே கடந்​திருந்​தது. இந்​தியா போன்ற வறுமை சூழ்ந்த நாட்​டில், எவ்​வளவு தூரம் விண்​வெளித் தொழில்​நுட்​பத்​துக்கு வரவேற்பு இருக்​கும் என்ற கவலை பலரிடம் இருந்​தது.

விண்​வெளியி​லிருந்து எப்​போதும் மழை போலப் பூமிமீது விழுந்​து​கொண்​டிருக்​கும் காஸ்​மிக் கதிர்​கள், எக்​ஸ்​-க​திர்​கள், காமா கதிர்​கள் குறித்த ஆய்​வைத் தான் முனை​வர் பட்ட ஆய்​வுக்​குத் தேர்வு செய்​திருந்​தார். அவருடைய ஆய்வு நெறி​யாளர்​கள், பூமிமீது விழும் கதிர்​களின் அளவை அளவிடக் கரு​வியை வடிவ​மைத்​து, பலூன் மூலம் உயரே செலுத்​தித் தரவு​களைச் சேகரித்து ஆய்வு செய்​யக் கூறி​யிருந்​தனர்.

அது​போல​வே, கஸ்​தூரிரங்​கன் காஸ்​மிக் கதிர்​களை அளவிடக் கரு​வியை வடிவ​மைத்​தார். பல கிலோமீட்​டர் உயரம் வரை செல்​லும் பலூன் தயார் செய்​தார். அந்​த பலூனில் பொருத்தி வானில் அனுப்​பி, அந்​தக் கருவி தரும் தரவு​களை ரேடியோ அலை​வரிசை​யில் பெற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

இதன் ஊடே, உயரே பலூன் செலுத்​து​வது எப்​படி, பலூன் செல்​லும் பாதை வழித்​தடத்தை மேலாண்மை செய்​வது எப்​படி, பலூனில் உள்ள ஆய்​வுக் கருவி அளவிடும் தரவை மின்​னணுத் தரவாக மாற்​று​வது எப்​படி, பலூனில் ரேடியோ அலைபரப்​பியைப் பொருத்தி அதன் வழியே அளவிடும் கருவி திரட்​டும் தரவைத் தரை​யில் கட்​டுப்​பாட்டு அறை​யில் பெறு​வது எப்​படி என ஒவ்​வொரு கூறை​யும் கஸ்​தூரிரங்​கனே வடிவ​மைத்​து, மேலாண்மை செய்து நிர்​வகித்து மேற்​கொள்ள வேண்​டி​யிருந்​தது.

“நான் பொறி​யாளர் இல்​லை​யே; எனக்​குத்​தான் ராக்​கெட் பற்றி ஏதும் தெரி​யாதே” என்று கலங்கி நின்ற கஸ்​தூரிரங்​க​னைப் பார்த்​து, கலகல​வெனச் சிரித்​து, அவரது ஆய்​வுக் காலத்​தில் செய்​தது போல, திட்​டத்​தின் பல்​வேறு கூறுகளைப் பிரித்து வேலைப் பிரி​வினை செய்​வது, அவற்றை ஒற்​றுமைப்​படுத்​திப் பிணைப்​பது போன்ற திறன்​கள் இஸ்​ரோ​வில் தேவை – பொறி​யாளர் பட்​டம் அல்ல என்​றார் விக்​ரம் சாரா​பாய்.

சாரா​பாய் தந்த உத்​வேகத்​தில் இஸ்​ரோ​வில் இணைந்த கஸ்​தூரிரங்​கன், முதலில் வெறும் நாற்​பது கிலோ எடை​யுள்ள ரோஹிணி எனும் மைக்​ரோசெயற்​கைக்​கோளைக் கட்​டும் திட்​டத்​தில், யு.ஆர். ராவ் எனும் புகழ்​மிக்க இந்​திய விண்​வெளி அறிஞரின் கீழ் பணி​யாற்​றி​னார். இதற்​கிடை​யில், இந்​தி​யா​வின் செயற்​கைக்​கோள்​களை விண்​வெளி​யில் நிறுத்த, தங்​களது ராக்​கெட்​டு​களை தாராள​மாகப் பயன்​படுத்​தலாம் என சோவி​யத் யூனியன் முன்​வந்​தது.

இதன் அடிப்​படை​யில், 358 கிலோ எடை​யுள்ள ஆரியபட்டா எனும் செயற்​கைக்​கோளை வடிவ​மைத்​துக் கட்​டும் பொறுப்பு அவருக்கு வழங்​கப்​பட்​டது. இந்த ஆரியபட்டா செயற்​கைக்​கோள் ஏவி சமீபத்​தில்​தான் 50 ஆண்​டு​கள் நிறைவடைந்துள்ளது குறிப்​பிடத்​தக்​கது. இவரது திறமை​யைக் கண்டு வியந்​து, பெங்​களூரில் உள்ள செயற்​கைக்​கோள் கட்​டும் இஸ்ரோ நிறு​வனத்​தின் இயக்​குந​ராக கஸ்​தூரிரங்​கன் நியமிக்​கப்​பட்​டார். பாஸ்​க​ரா-1, பாஸ்​க​ரா-2 ஆகிய சோதனைச் செயற்​கைக்​கோள்​கள், ஐஆர்​எஸ் எனும் முதல் தலை​முறைத் தொலை​யுணர்வு செயற்​கைக்​கோள்​களை​யும் வடிவ​மைத்​தார்.

1994-இல் இஸ்ரோ தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். இவரது தலை​மை​யில் இஸ்ரோ பல்​வேறு சாதனை​களைப் படைத்​தது. பிஎஸ்​எல்வி ராக்​கெட் வெற்​றிகர​மாக இயக்​கப்​பட்​டது இவரது காலத்​தில்​தான். மேலும், ஜிஎஸ்​எல்வி முதல் தலை​முறை ராக்​கெட்​டும் இவரது காலத்​தில்​தான் செயல்​பாட்​டுக்கு வந்​தது.

அது​வரை, இந்​தி​யா​வின் தொலைத்​தொடர்​புச் செயற்​கைக்​கோள்​கள் (இன்​சாட்​-1) அமெரிக்​கா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​பட்​டது. தாமே சுய​காலில் நிற்​கும் வித​மாக இன்​சாட்-2 வகைச் செயற்​கைக்​கோள்​களை வடிவ​மைத்​துச் சாதனை செய்​தார். 1994 முதல் 2003 வரை ஒன்​பது ஆண்​டு காலம் இஸ்ரோ தலை​வ​ராகப் பணி​யாற்​றி, அனை​வரின் நன்​ம​திப்​பைப் பெற்​றார்.

இஸ்​ரோ​வில் குறிப்​பிடத்​தக்க சாதனையைத் தொடர்ந்​து, பணிமூப்​புக்​குப் பிறகு நியமன ராஜ்யசபா உறுப்​பின​ராக​வும், பின்​னர் இந்​தி​யத் திட்​டக்​குழு​வின் உறுப்​பின​ராக​வும் பல்​வேறு பதவி​களில் பணி​யாற்​றி​னார். பின்​னர், அவர் பெங்​களூரு​வின் தேசிய மேம்​பட்ட ஆய்வு நிறு​வனத்​தின் (NIAS) இயக்​குந​ராக​வும், கர்​நாடக ஞான ஆயோ​கா​வின் (KJA – கர்​நாடக அறிவு ஆணை​யம்) தலை​வ​ராக​வும் பணி​யாற்​றி​னார்.

சர்​வ​தேச வானியல் ஒன்​றிய உறுப்​பின​ராக​வும், சர்​வ​தேச விண்​வெளி அகாட​மி​யின் உறுப்​பின​ராக​வும், விண்​வெளி அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்விக்​கான ஐக்​கிய நாடு​களின் மையத்​தின் ஆளும் குழு​வின் தலை​வ​ராக​வும் இருந்​தார். பொறி​யியலில் சாந்தி ஸ்வரூப் பட்​நாகர் விருது, விண்​வெளி​யில் ஸ்ரீ ஹரி ஓம் ஆசிரமம் டாக்​டர் விக்​ரம் சாரா​பாய் ப்ரீரிட் விருது உட்பட பல விருதுகளைப் பெற்​றுள்​ளார்.

வான​வியலில் பிர்லா நினைவு விருது, பயன்​பாட்டு அறி​வியலுக்​கான ஸ்ரீ எம்​.எம்​.சு​கானி நினைவு விருது, அறி​வியல் தொழில்​நுட்​பத்​தில் ஹெச்​.கே.ஃபிரோடியா விருது, சாந்​தி​நிகேதன் விஸ்​வ​பார​தி​யின் ரதீந்​திர புரஸ்​கார் மற்​றும் விண்​வெளிக்​கு சிறந்த பங்​களிப்​பிற்​காக டாக்​டர்​.எம்​.என்​.​சாஹா பிறந்​த​நாள் பதக்​கம் என பல விருதுகள் அவருக்கு வழங்​கப்​பட்​டன. இந்​திய அரசு பத்​மஸ்ரீ, பத்ம பூஷண் மற்​றும் பத்ம விபூஷன் ஆகிய மூன்று விருதுகளை​யும் அவருக்கு வழங்​கியது.

தொழில்​நுட்ப முன்​னேற்​றம், பொருளா​தார வளர்ச்சி ஆகிய​வற்​றின் தொடர்ச்​சி​யாக சமூக மற்​றும் அரசி​யல் எழுச்​சிகளின் தூண்​டலின் நீட்​சி​யாக, இந்​தி​யா​வின் சிக்​கலான சமூகம் தீவிர படிநிலை அமைப்​பிலிருந்து சமத்​துவ அமைப்​புக்கு மாறியது தான், தன்​னைப் போன்ற ஒரு​வர் ஏழ்​மை​யில் பிறந்​தும் முக்​கிய பதவி​களுக்கு உயர்ந்​ததற்​குக் காரணம் என சமீபத்​தில் பதிவு செய்​திருந்​தார். இதே​போல, அறி​வியல், தொழில்​நுட்​பம், கணிதம் மட்​டுமல்​லாமல், கலை, இலக்​கி​யம், வரலாறு எனப் பல துறை​களில்​ பள்​ளி-கல்​லூரி​ கல்​வி அமைந்​தால்​ தான்​ முழு மனித​னாக வளர முடி​யும்​ எனவும்​ கூறியதும்​ கவனத்​தில்​ கொள்​ளத்​தக்​கது.