சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று (மார்ச் 30) மட்டும் 6 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. ஈரோடு, வேலூர், கரூர், மதுரையில் தலா 101 டிகிரி பாரன்ஹீட்டும், தருமபுரியில் 100 டிகிரி ஃபரான்ஹீட்டும் வெப்பம் பதிவானது. வெயில் சுட்டெரித்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசு மக்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பறவைகளுக்கு இந்த கோடை காலத்தில் உணவு, நீர் வழங்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.