Site icon Metro People

தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்: சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தொடர்பான சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், சட்டப்பேரவை விதி எண்: 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, நேற்று (செப். 08) தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில், இந்த அரசு உருவாக்கச் சட்டம் இயற்றும். அதற்கான சட்டமுன்வடிவ வரைவு இந்தச் சட்டப்பேரவைத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தொடர்பான சட்ட மசோதாவை மு.க.ஸ்டாலின் இன்று (செப். 09) சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார். இந்த மசோதா விரைவில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Exit mobile version