Site icon Metro People

நள்ளிரவில் பின் தொடர்ந்த வாலிபர்.. காவலன் SOS செயலியால் பயன் இல்லை: மோட்டார் சைக்கிள் வீராங்கனை வேதனை

மோட்டார் சைக்கிள் வீராங்கனையான நிவேதா ஜெஸ்ஸிகா பணி முடிந்து இரவு வீடு திரும்பியபோது நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் தன்னை பின் தொடர்ந்ததாகவும் அப்போது எஸ்.ஒ.எஸ். (SOS Emergency)  செயலியை பயன்படுத்திபோது அது செயல்படவில்லை  எனவும் சமூக ஊடகத்தில் வேதனையோடு பதிவிட்டுள்ளார்.பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப்பின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் நிவேதிதா ஜெஸ்ஸிகா. இவர் இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்றவர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை காவல்துறை டுவிட்டர் பக்கத்தை இணைத்து புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில்,  நேற்று இரவு அண்ணா நகரில் இருந்து வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் போது,  கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த மர்ம நபர் அசோக் பில்லர் பகுதியிலிருந்து தன்னை பின் தொடர்ந்ததாக  தெரிவித்துள்ளார். அந்த மர்மநபர் ஆலந்தூர் வரை தன்னை பின்தொடர்ந்து வந்ததாகவும், பின்னர் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனது குடும்ப உறுப்பினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.பின்னர், அந்த மர்ம நபர் சென்று விட்டதாக நினைத்து வீட்டுக்கு செல்ல முற்பட்டபோது மீண்டும் அந்த மர்ம நபர் தன்னை பின் தொடர்ந்ததாகவும் இரவு ஒரு மணி அளவில் லக்கி கல்யாண மண்டபம் பகுதி கடந்து செல்லும்போது அந்த மர்ம நபர் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொள்ள முயன்றதாகவும் செல்போன் பறிக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை பசு ஒன்றின் மீது மோதி செல்போனை கீழே தவறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த வாலிபர், தைரியமாக தான் இப்படித்தான் நடந்து கொள்வேன் என மிரட்டி சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவ்வாறு நடந்து கொண்ட மர்ம நபரை தன் இரு சக்கர வாகனத்தில் துரத்திப் பிடிக்க முயன்றதாகவும் ஆனால் அந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டதாகவும் நிவேதிதா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.அந்த சமயத்தில் காவல்துறை வழங்கிய காவலன் SOS செயலியை பயன்படுத்தியதாகவும் ஆனால் எந்தவித பதிலும் காவல் துறையிலிருந்து கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். பயன்படாத இந்த செயலி எதற்காக கொண்டு வந்தார்கள் என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.அதன்பின் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் இருப்பதாகவும் தவறாக நடந்து கொண்ட அந்த மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் ஜெஸ்ஸிகா பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் மாநில கட்டுப்பாட்டு அறையின் சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து, காவலன் SOS செயலி செயல்படாதது குறித்து நிவேதிதாவிடம் கேட்டுள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை காவல்துறை ஆதாரங்களை சேகரித்து விட்டதாகவும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Exit mobile version