Site icon Metro People

சிபிஎஸ்இ மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம்: அமைச்சர் பொன்முடி

சென்னை: பொறியியல் ,கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்இ முடிவுகள் வெளியான பிறகு, அடுத்த 5 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “பொறியியல் சேர்க்கைக்கு 42,716 பேர் இன்று வரை விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

ஜூலை கடைசியில் சிபிஎஸ்இ ரிசல்ட் வரும் என்று சொல்லுகிறார்கள். இவ்வளவு தாமதம் ஆனால் மாணவர் சேர்க்கைக்கு தாமதம் ஏற்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்த பின்னர் அடுத்த 5 நாட்களுக்கு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு செய்ய நாட்கள் நீட்டிக்கப்படும். ஆனால் கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டது. இதற்காகத்தான் நாங்கள் மாநில கொள்கையின் அடிப்படையில் கல்வி இருக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பொறியியல் காலி இடங்கள் உள்ளது. பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது” என்று அவர் கூறினார்.

Exit mobile version