Site icon Metro People

அபராதமின்றி மின்கட்டணம் செலுத்த இன்று கடைசி: கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை

மழை காரணமாக அபராதமின்றி மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாளாகும். இதற்கிடையே, மின்கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இல்லையெனில், மின் விநியோகம் துண்டிக்கப்படும்.

இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கடந்த 6-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து, மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் கால அவகாசம் அளித்தது. அதன்படி, மேற்கண்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் மின்நுகர்வோர், மின் கட்டணத்தைச் செலுத்த 8 முதல் 15-ம் தேதி வரை கடைசி நாளாக உள்ளவர்களுக்கு கூடுதலாக 15 தினங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதேபோல், மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி 16 முதல் 29-ம் தேதி வரை உள்ளவர்கள் 30-ம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, மின் கட்டணம் செலுத்த இன்று (30-ம் தேதி) கடைசி நாளாகும்.

கனமழை நீடிப்பு

இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வீடுகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். பலர் வீட்டை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களில் குடியேறி உள்ளனர். இதனால், மின் கட்டணத்தைச் செலுத்தும் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version