புதுடெல்லி: பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சண்டிகரில் செப்டம்பர் 2024 இல் நடந்த குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய ஹேப்பி பாசியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங்குக்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை என்ஐஏ பிறப்பித்தது. அதாவது, ஓய்வுபெற்ற பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) நடத்திய சதியின் ஒரு பகுதியாகும்.
ஹேப்பி பாசியாவுக்கு ஏற்கெனவே, பஞ்சாப்பில் நடத்தப்பட்ட 14 குண்டு வீச்சு தாக்குதல்களில் தொடர்பு உள்ளது. இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும் ஹேப்பி பாசியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பஞ்சாபில், ஹேப்பி பாசியா மீது 18 குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கில் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ள ஹேப்பி பாசியா குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் சன்மானத்தை என்ஐஏ அறிவித்திருந்தது. இந்த நிலையில், என்ஐஏவால் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்காவில் போலீஸார் கைது செய்தனர். அவரை அதிகாரிகள் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வர உள்ளனர்.