சென்னை: “மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்.” என்று மாற்றுத் திறனாளிகளை சர்ச்சைக்குரிய பதம் கொண்டு அழைத்தமைக்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டும் அறிக்கையில், “இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை கருணை உள்ளத்தோடு “மாற்றுத் திறனாளிகள்” என்று பெயரிட்டு அழைத்தார் கலைஞர். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் – வருத்தமும் அடைந்தேன்.
கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்து அதிரடிகள்.. முன்னதாக இன்று காலை திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை விடுவித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். பின்னர் அந்தப் பதவியில் திருச்சி சிவாவை நியமித்து அறிக்கை வெளியிட்டார். இந்த இரு அறிக்கைகளும் கவனம் பெற்ற நிலையில் சில நிமிடங்களிலேயே துரை முருகன் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை வெளியானது. காலையில் இருந்து திமுகவில் வெளியான அடுத்தடுத்த அறிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.