யானைகள் வழித்தடத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு வெளி பகுதியான மசினக்குடி பகுதியில் உலவி வந்த ரிவால்டோ எனும் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானையை வனத்துறையினர், யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தனர்.

இந்நிலையில், யானையை பிடிக்க வனத்துறையினருக்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் ஆர்வலர் முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 19) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ரிவால்டோ யானை குணமடைந்து விட்டதாகவும், இந்த யானையால் எவரும் காயமடையவில்லை, எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதால் யானையை பிடிக்கக் கூடாது எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், யானையை பிடித்து சிகிச்சை அளித்த பின் மீண்டும் வனப்பகுதியிலேயே விடப்படும் என அரசுத்தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் அதிகளவில் இருப்பதாகவும், காட்டு யானைகள் மற்றும் வளர்ப்பு யானைகளின் கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், யானைகள் வழித்தடங்களில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.