சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கதையாகி வருகிறது. இந்த தொடர் கைது சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை ஈடுபட்டு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பது தமிழக மீனவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனிடையே இலங்கையின் முல்லை தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் 6-8-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 10-8-2022 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.