கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு இன்றும் நாளையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் சில நாட்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு வார இறுதி நாளான ஜூலை 31-ம் தேதியான சனிக்கிழமையும், ஆகஸ்ட் 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரள அரசு அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை தொடங்கி 48 மணிநேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கையொட்டி அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல நகரங்களில் இருசக்கர வாகனங்கள் உட்பட ஒரு சில வாகனங்கள் மட்டுமே இயங்குகின்றன.
மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.