ஆன்லைன் சூதாட்டங்கள் ஒழிக்கப்படாத நிலையில், பணத்தை இழந்தவர்கள் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினால் தமிழகத்தில் பொது அமைதியும், சட்டம் – ஒழுங்கும் பாதிக்கப்படும். அது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் கேடாக உருவெடுக்கும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த இஸ்மாயில் என்ற ஓட்டுநர், கடனை அடைப்பதற்காக நண்பருடன் இணைந்து வேளச்சேரியில் மூதாட்டியை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும், கொலைகளும் வாடிக்கையாகி விட்ட நிலையில், இப்போது கொள்ளைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே கடலூர் மாவட்டம் வேப்பூரில் பட்டத்தம்மாள் என்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

ஆன்லைன் சூதாட்டங்கள் ஒழிக்கப்படாத நிலையில், பணத்தை இழந்தவர்கள் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினால் தமிழகத்தில் பொது அமைதியும், சட்டம் – ஒழுங்கும் பாதிக்கப்படும். அது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் கேடாக உருவெடுக்கும்.

ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகள் பல பரிமானங்களைக் கொண்டவை. அவை தமிழ்ச் சமூகத்தை அழித்து விடும். அதற்கு முன்பாக தமிழக அரசு விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.