சிலம்பரசன் நடிப்பில் உருவாகவுள்ள ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது.

‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிலம்பரசன். இதில் ‘மாநாடு’ படத்தின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்தது.

இதனிடையே, கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘பத்து தல’ படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் சிலம்பரசன். இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கவுள்ளது. இதில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், டிஜே, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடிக்கவுள்ளனர். இதன் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரியவுள்ளார்.

கன்னடத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘பத்து தல’. இதன் படப்பிடிப்பு ஏற்கெனவே நடத்தப்பட்டு, பல்வேறு பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.