தஞ்சாவூரைச் சேர்ந்த ஆர். மணிவண்ணன் பயண ஒளிப்படக் கலைஞர். பாரம்பரியத்தைத் தேடிச் செல்லும் அவருடைய பயணங்கள், நம்முடைய கலாச்சாரத்தின் பெருமையை அறிந்துகொள்ள உதவுகின்றன. அந்தப் பயணங்களில் அவர் எடுக்கும் ஒளிப்படங்கள், நம்முடைய கலாச்சாரத்தின் பெருமைமிகு கூறுகளை வரலாற்றில் நிலைக்கச் செய்யும் விதமாக இருக்கின்றன.

தன்னுடைய பயண அனுபவங்களை ஒளிப்படக் கண்காட்சிகளின் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்வது அவருடைய வழக்கம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தஞ்சாவூரில் ’முகத்தின் குரல் – நாகாஸ்’ என்கிற பெயரில் அவர் ஒளிப்படக் கண்காட்சி நடத்தினார். அந்தக் கண்காட்சி நாகாலாந்து பழங்குடி மக்களின் கலாச்சாரம், எளிமையான வாழ்க்கை முறை, உணவு முறை, வண்ணமயமான உடைகள், திருவிழா கொண்டாட்டங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தின.

தற்போது ’தி கிரேட் சோழாஸ்’ எனும் பெயரில் ஒரு கண்காட்சியைச் சென்னையில் நடத்திவருகிறார். சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் தட்சிணசித்ரா அருங்காட்சியகத்தில் அந்தக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. தட்சிணசித்ராவின் காதம்பரி அரங்கில் மணிவண்ணனின் ஒளிப்படக் கண்காட்சியை இளம்பகவத் ஐ.ஏ.எஸ் மே 06 அன்று தொடங்கிவைத்தார். இந்தக் கண்காட்சி மே மாதம் 20 வரை நடக்க இருக்கிறது.

இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் மணிவண்ணனின் ஒளிப்படங்கள் தஞ்சாவூரின் வரலாற்றையும், அதன் பெருமைமிகு கலாச்சாரத்தையும் இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் விதமாக உள்ளன. தஞ்சாவூரின் அடையாளமாகத் திகழும் பெரிய கோவிலின் அழகையும், அதன் கோபுரத்தின் கம்பீரத்தையும் மணிவண்ணன் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. சொல்லப்போனால், நேரில் சென்று பார்ப்பதற்கு நிகரான அனுபவத்தை அளிக்கின்றன. சென்னையில் இருந்தபடியே தஞ்சாவூரை உணர விரும்பினால், இந்தக் கண்காட்சிக்குச் சென்றுவாருங்கள். சோழர்களின் காலத்துக்குச் சென்று திரும்பிய அனுபவத்தை அது உங்களுக்கு அளிக்கும்.