நாடுமுழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதன் காரணமாக பொருளாதார தேக்கம் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி வங்கிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்திானர்.

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து அவற்றின் தலைவர்கள், நிர்வாக இயக்குனர்களுடன் காணொலி காட்சி மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நிதித்துறை இணையமைச்சர் டாக்டர். பகவத் கிசான்ராவ் கரத் மற்றும் நிதி சேவைகள் துறை செயலாளர் தேபாசிஸ் பாண்டா மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தொடங்கிய பெருந்தொற்று தொடர்பான நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்ட பல நடவடிக்கைகளையும், கோவிட்-19 புதிய வகை தொற்றால் எதிர்காலத்தில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் தயார் நிலை குறித்தும் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

அவசரகால கடன் உதவி திட்டத்தின் வெற்றியை பாராட்டுகிறேன். சாதனைகளுடன் நின்று விடாமல், தொடர் பெருந்தொற்று பாதிப்பால் தொழில்துறை சந்திக்கும் இடையூறுகளை போக்க உதவுவதில் பொதுத்துறை வங்கிகளின் ஒட்டு மொத்த முயற்சிகள் இருக்க வேண்டும். வேளாண் துறை, விவசாயிகள், சில்லரை விற்பனை துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டும்.

சர்வதேச நிலவரம் மற்றும் ஒமைக்ரான் வகை தொற்றால், எதிரான அலை வீசினாலும், தொழில்துறை முன்னேற்றம் அடைந்து வருகிறது.

2020-21ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ரூ.31,820 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளன. இது கடந்த 5 நிதியாண்டுகளில் மிக அதிகம். கடந்த 7 நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரூ.5,49,327 கோடி கடன்களை மீட்டுள்ளன.

சில்லரை விற்பனை துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் காரணமாகவும், கடன் பெற்றவர்களின் நிதிநிலை மேம்பட்டுள்ளதாலும் கடன் தேவை அதிகரிக்கும்.

கடன்களை திருப்பி செலுத்தும் கலாச்சாரம் நாட்டில் அதிகரித்துள்ளது. பல கொள்கை முடிவுகளால் பொதுதுறை வங்கிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. பெருந்தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து விடுபட, பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான உந்துதல்களை அளித்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.