சென்னை: ராமநாதபுரம் சாலைவிபத்தில் உயிரிழந்த இருவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம், மாயாகுளம் பகுதியில் திங்கள்கிழமை (14-8-2023) மதியம் அரசு பேருந்தும், தனியார் வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து நிலைதடுமாறி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்து கழக சொகுசு பேருந்து ஒன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. அப்போது, கீழக்கரை பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே பேருந்து வந்தபோது, எதிர்பாராத விதமாக லாரி ஒன்று குறுக்கிட்டுள்ளது. இதனால், பேருந்து ஓட்டுநர் பேருந்தை திருப்ப முயன்றபோது, அது கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது. மேலும், அருகே இருந்த சுவரை உடைத்துக்கொண்டு சாலை ஓரம் இருந்த பனை மரத்தின் மீது மோதி நின்றது. இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.