டெல்லியில் உள்ள மெட்ரோ நிலையங்களில் திருநங்கைகளுக்காக தனிக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ஆண், பெண் என இருபாலருக்குமான கழிப்பறைகளே உள்ளன. இதனால் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள், இந்தக் கழிப்பறைகளை உபயோகப்படுத்தும் போது பல்வேறு பிரச்சினைகள் எழுவதை அன்றாடம் காண முடிகிறது.

இந்நிலையில், இந்தப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் திருநங்கைகளுக்காக பிரத்யேக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை ஆண் – பெண் பாலினத்தவர்களை தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே தனிக் கழிப்பறைகள் இருந்து வந்த சூழலில், திருநங்கைகளுக்காகவும் தனிக் கழிப்பறைகளை நிறுவிய டெல்லி மெட்ரோ ரயில் கழகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.