சென்னை: ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ், டேனியல், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மரகத நாயணம்’. இந்தப் படத்தை ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியிருந்தார். டில்லி பாபு தயாரித்திருந்தார். திபு நினன் தாமஸ் இசையமைத்திருந்த இப்படத்தின் ‘நீ கவிதைகளா’ பாடல் பெரிய அளவில் ஹிட்டடித்து இன்றும் இன்ஸ்டா ரீல்ஸ்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பாடல் மட்டுமல்லாமல் படமும் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியை வைத்து ஏ.ஆர்.கே.சரணவன் ‘வீரன்’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், அடுத்து ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்தப் படத்தையும் டில்லிபாபுவே தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.