ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம், நர்சாபுரம் பகுதியை சேர்ந்த நாகேஸ்வர ராவ், அனந்தலட்சுமி தம்பதியரின் ஒரே மகள் யசோதா சாய். இவருக்கும் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த வினய் குமார் என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தலைப் பொங் கலை கொண்டாட வினய் குமார் மனைவியுடன் அவரது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டுக்கு வந்த புது மாப்பிள்ளைக்கு 365 வகையான உணவுகளை சமைத்து, விருந்து வைத்து அசத்தியுள்ளனர். இதில், 40 வகை அசைவ உணவுகள், 140 வகை மாவுப் பலகாரங்கள், 30 வகை ஐஸ் கிரீம்கள், 35 வகை பிஸ்கட்டுகள், 25 வகை பழங்கள், 30 வகையான சைவ உணவுகள் மற்றும் பிற உணவுகளும் பரிமாறப்பட்டன.

இதே ஊரைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ், மாதவி தம்பதியரின் மகள் குந்தவைக்கும் சாய் கிருஷ்ணா என்ற வெளிநாடு வாழ் இந்தியருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பொங்கல் பண்டிகைக்கு சாய் கிருஷ்ணா தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவரை வெங்கடேஸ்வர ராவ் தம்பதியினர் பொங்கல் பண்டிகைக்கு வீட்டுக்கு அழைத்து வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவு சமைத்து விருந்தளித்தனர்.

இதேபோன்று கிழக்கு கோதா வரி மாவட்டம், ஆலமூரு செமுடு லங்கா பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு வந்த மகள், மருமகனுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து விருந்து வைத்துள்ளனர். இதில் 30 குடும்பத்தினர் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.