சீனாவிடமிருந்து கடன் பெறுவதற்கு முன்னர் உலக நாடுகள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என வங்கதேச நிதியமைச்சர் முஸ்தபா கமல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சீனாவிற்கும் பிற நாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் ஆகும்.

அதாவது துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், சரக்கு முனையங்கள், போன்றவற்றை சாலை மார்க்கமாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் இணைப்பதே இந்த திட்டம். இதன் மூலம் எளிதாக சரக்கு போக்குவரத்து செய்யப்படுவதுடன், உலகம் முழுவதும் உள்ள தொழில் முனையங்கள் ஒன்றிணைக்கப்படும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த வளரும் நாடுகளுக்கு சீனா கடனளித்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் கடன் வழங்கும் முறையை வங்கதேச அமைச்சர் முஸ்தபா கமல் விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து முஸ்தபா கமல் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியது: “சீனா தனது கடன்களை மதிப்பிடுவதற்கு மிகவும் வலுவான செயல்முறையை பின்பற்றுகிறது. இந்த வகையான மோசமான கடன்கள் அழுத்தங்களைச் சேர்க்கின்றன. ஒரு திட்டத்திற்கு கடன் பெறுவதற்கு முன் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

எந்தத் திட்டங்கள் அவசியமானவை மற்றும் செயல்பாட்டில் உள்ளன, முடிந்தவரை விரைவாக செலுத்தும் கடன்களை மட்டுமே நாங்கள் பெறுகிறோம். இதை தவிர்த்து பிறவற்றுக்கு கடன் கொடுத்தால் நாங்கள் வேண்டாம் நன்றி என்று சொல்லிடுவோம். உலக நாடுகள் சீனாவின் இத்திட்டத்திற்கு கடன் பெறுவதற்கு முன்னர் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்” என்றார்.