இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தென்மேற்கு பகுதியில் இருந்துகாற்று வீசத் தொடங்கி உள்ளதால், இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே தெற்கு அந்தமான் மற்றும்தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

மேலும் கடலின் மேற்பரப்பு வெப்பநிலையும் சாதகமாக உள்ளதால் வடக்கு அந்தமான், கிழக்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம். அதற்கடுத்த 72 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறக்கூடும். இப்புயலுக்கு ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. அது வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து, வரும் 26-ம் தேதி மாலை அல்லது 27-ம்தேதி அதிகாலையில் ஒடிசா, மேற்குவங்க கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடக்கு அந்தமான் கடல், கிழக்கு மத்திய வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக உள்ளநிலையில், ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள மீனவர்களுக்கு செயற்கைக் கோள் தொலைபேசி, நேவிக், நேவ்டெக்ஸ் ஆகிய தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தகவல் தெரிவித்து, அவர்கள் 23-ம் தேதிக்குள் கரைக்குதிரும்புவதற்கான நடவடிக்கைகளை மீன்வளத் துறை ஆணையர் மேற்கொண்டுள்ளார்.

ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ள படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீனவர்கள் கரைக்கு திரும்புவதை 24 மணி நேரமும் கண்காணிக்க மீன்வளத் துறை அலுவலகங்களில், 24 மணி நேரகட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. மக்கள் பேரிடர் தொடர்பான தகவல்களை பெறவும் தெரிவிக்கவும், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்டஅவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்றகட்டணமில்லா தொலைபேசி பெண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் TNSDMA TWITTER என்ற சமூக வலைதளத்தையும், TNSMART செயலியையும் பொதுமக்கள் கவனிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

4 நாட்கள் மழை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது: வெப்பச் சலனம் காரணமாக நாளை மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

23, 24-ம் தேதிகளில் நீலகிரிமாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானதுமுதல் மிதமான மழையும் பெய்யலாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.