நடிகர் சந்தானம் கதாநாயகனாக மாறி பல முயற்சிகள் செய்தும், அவருக்கு பெயர் சொல்லும் அளவிலான திரைப்படங்கள் சொர்ப்பம் தான். இருப்பினும், அவரது நடிப்பில் வெளிவந்த தில்லுக்கு துட்டு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அவரது மார்க்கெட்டை நிலைக்கு கொண்டு வந்தது.
இதனையடுத்து, வெளியான தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் மினிமம் கியாரண்டி படமாக சந்தானத்துக்கு லாபத்தைக் கொடுத்தது. இந்நிலையில், தில்லுக்கு துட்டு 3ம் பாகமாக டிடி ரிட்டர்ன்ஸ் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்தின் முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்!
டிடி ரிட்டர்ன்ஸ் கதை: ஹீரோயின் சுரபியை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற முயலும் நடிகர் சந்தானத்தின் நண்பர்கள் திருடும் பணமானது சூழ்நிலையால்,
ஒரு பேய் பங்களாவில் சிக்கிக் கொள்கிறது. காதலிக்காக அந்த பணத்தை மீட்க அந்த பேய் பங்களாவுக்கு சுரபியுடன் செல்கிறார் சந்தானம். கஜினி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த பிரதீப் ராம் சிங் ராவத் பேயாக அந்த பங்களாவில் நடத்தும் கேம் ஷோவில் கலந்து கொள்ளும் சந்தானம் எப்படி அங்கே இருந்து பணத்துடன் தப்பினாரா? இல்லையா? என்பதை 2 மணி நேரம் காமெடியாக சொல்ல முயற்சித்த படமே இந்த டிடி ரிட்டர்ன்ஸ்.
படத்தின் முதல்பாதி விறுவிறுப்பு சற்று குறைவாகவே இருந்தாலும், 2ம் பாதிக்கு கதையை நகர்த்துகிறது. படத்தில் பாடல்கள் பெரிதும் இடம் பெறாதது, படம் பார்ப்பவர்களை மேலும் கதைக்குள் இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது.
படத்தில் நடித்த நடிகர்கள் தேர்வு; படத்தின் பலமாக பார்க்கப்பட்டது. மொட்டை ராஜேந்திரன், கிங்ஸிலீ, மாறன்,முனிஸ்காந்த் உள்ளிட்டோர் திரையில் வரும்பொழுது சிரிப்பலைகள் அடிக்கடி எட்டி பார்க்கிறது. படத்தின் 2ம் பாதியில் பேயிடமிருந்து தப்பிக்கும் காட்சிகளில் திகில் கலந்த நகைச்சுவையை படக்குழு ரசிகர்களுக்கு விருந்தாக்குகிறது.
சூழ்ச்சியில் சிக்கும் சந்தானம் பணத்திற்காக நடக்கும் இந்த கேமில் எப்படி வெற்றி பெற்றார்? என்பதே படத்தின் இறுதிக்காட்சி!
குழந்தைகள், பொதுமக்களுக்கு சிரிப்பை ஏற்படுத்த முயற்சித்த ”டிடி ரிட்டன்ஸ்” திரைப்படம் – நடிகர் சந்தானத்தின் வழக்கமான படங்களில் ஒன்று!