சென்னையில் குடிசை மாற்று வாரியக் கட்டிடத்தில் 24 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலையில் இதில் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, திருவொற்றியூரில் அரிவாக்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை (திங்கள்கிழமை) இடிந்து விழுந்தது. இக்கட்டிடத்தில் மொத்தம் 24 வீடுகள் இருந்தன. அவை அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிர் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களுக்க மாற்று வீடுகள் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

”திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்துள்ளேன்.

விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்றுக் குடியிருப்புகள் வழங்கவும் அமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விவரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.