சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பில் 87 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

சென்னை ஐஐடி தனது பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த படிப்பில் சேர ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை. 10-ம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் தேர்ச்சிப் பெற்றவர்கள், 12-ம் வகுப்பை முடித்தவர்கள், கல்லூரிகளில் ஏதேனும் இளநிலைப் படிப்பைத் தொடர்பவர்கள், ஏதேனும் பணிகளில் வேலை செய்பவர்கள் என அனைவரும் இந்தப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ’அனைவருக்கும் ஐஐடிஎம்’ என்ற பெயரில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 58 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட 192 மாணவர்களுக்கு ஐஐடியில் 14 வாரங்கள் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் பிஎஸ் பட்டப்படிப்பில் சேர்வதற்கான தகுதி தேர்வை எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 87 மாணவ-மாணவிகளுக்கு சென்னை ஐஐடியில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 75 சதவிகிதம் கல்வி உதவித்தொகையை சென்னை ஐஐடி வழங்குகிறது.

இந்நிலையில், ஐஐடி-யில் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்துள்ளவர்களில் 45 பேருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (நவ.5) ஆணைகளை வழங்கினார்.

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்று மேலும் பல திட்டங்கள் கொண்டு வருவதற்கு இது உதவியாக இருக்கும். அரசு பள்ளி மாணவர்களை அடுத்த கட்டடத்திற்கு கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். அதில் எங்களுக்கு உதவியாக சென்னை ஐஐடி இணைந்ததற்கு நன்றி. இதுபோன்ற மேலும் அறிவிப்புகள் உங்களிடமிருந்து வரும்போது அதற்கும் நாங்கள் தயாராக இருப்போம்” என்றார்.

ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், “87 மாணவர்கள் என்பது வெறும் 33 சதவிகிதம்தான். வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். நான் இயக்குநராக பொருப்பேற்றதற்கு எனக்கு கிடைத்த ஒரு சிறந்த பரிசு இது. இது சாதாரண படிப்பு கிடையாது. இதில் பயிற்சி எடுத்து வெற்றி பெற்ற மாணவர்கள் மேலும் வெற்றி அடைவார்கள். இன்னும் 10 வருடத்தில் டேட்டா சயின்ஸில் அதிக வேலை வாய்ப்பு ஏற்படும். தற்போது பிஎஸ் படிப்பிற்கு தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உங்களுக்கு பின்னால் வரும் மாணவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அவர்களையும் இதுபோன்ற படிப்புகளை மேற்கொள்ள ஊக்குவியுங்கள்” என்றார்.