கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், ஐகுந்தம் மஜித் கொல்லஅள்ளி மலைமீது இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்ட தூக்கிவச்சான் கல் கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் மஜீத்கொல்லஅள்ளி மலை மீது கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் மாவட்ட அரசு அருங்காட்சியகமும் இணைந்து ஆய்வை மேற்கொண்டனர்.

இதுகுறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கிராமத்தில் இருந்து பார்க்கும் போதே மலைமீது ஒரு கல் வித்தியாசமாக தெரிந்தது. மஜித்கொல்லஅள்ளி மலைமீது சென்றபோது தான், அது பெருங்கற்காலத்துக்கு முன்னர் நினைவுச்சின்னங்களில் ஒன்றான தூக்கிவச்சான் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மயிலாடும்பாறை மலையடிவாரத் தில் உள்ள பெருங்கற்கால கற்திட்டைகள் மற்றும் வெண்சாந்து ஓவியங்கள் காணப் படுகின்றன. அந்த பகுதியிலேயே புதியகற்காலத்தைச் சேர்ந்த செங்காவி ஓவியங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெருங்கற்படைக் காலத்தில் ஓரளவு ஒழுங்குபடுத்தப்பட்ட, துளையிடப்பட்ட, கற்பதுகைகள் அமைத்தவர்கள், அதற்கு முன்னர் புதிய கற்காலத்திற்கும், பெருங்கற்படை காலத்துக்கும் இடையில் இருந்தவர்கள், இருக்கின்ற கல்லை அப்படியே சிறுகற்கள் மீது நிறுத்தி இருக்கிறான். அது இறந்தவர்கள் நினைவாக வைக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். இங்குள்ள கல் 7 அடி நீளம் 4 அடி அகலம் 4 அடி உயரம் கொண்டதாகவும், அடியில் மூன்று கற்கள் கொண்டு நிறுத்தப்பட்டும் இருக்கிறது. அக்கால மக்கள் இது மாதிரியான கற்கள் தொலைவில் இருந்து பார்க்கும் போதே தெரியும் வகையில்தான், அந்த கற்களை நிறுத்தினார்கள்.

இது இப்பகுதியில் கண்டறியப்பட்ட மூன்றாவது தூக்கிவச்சான் கல் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த பகுதியை ஆய்வு செய்தால், பல தொல்லியல் ஆதாரங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.