சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசும், காவல் துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 24 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தும், 23 இடங்களில் சுற்றுச்சுவர் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம் அல்லது உள் அரங்குகளிலும் அணிவகுப்பை நடத்திக்கொள்ள அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்து சுற்றுச்சுவர் பாதுகாப்புடன் கூடிய மைதானங்கள், அரங்குகளில் அணிவகுப்பை நடத்த உத்தரவிட்டது தவறு. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மேலும் இடைப்பட்டக் காலத்தில் காவல் துறை, பல்வேறு அமைப்புகளுக்கு போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. கிட்டத்தட்ட 500 போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட தேதியில் காவல் துறை அனுமதி வழங்குவதாக தெரிவித்தால், அதை ஏற்க தயாராக இருக்கிறோம்” என்று வாதிடப்பட்டது.

அப்போது தமிழக காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனக்கு மனுவின் நகல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனவே, அதனைப் பெற்று இதுதொடர்பாக விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “மனுதாரர்கள் தரப்புக்கு மனுவின் நகலை வழங்க உத்தரவிட்டு, மனுவுக்கு தமிழக அசு, காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், “ஜனவரி 22 மற்றும் 29-ம் தேதிகளில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறோம். எனவே, அந்த மனுவை பரிசீலிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கோரினர்.

இதையடுத்து, ஆர்எஸ்எஸ் தரப்பில் அளிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஆர்எஸ்எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.