அன்னூர்: கோவை காளப்பட்டியைச் சேர்ந்தவர் மேனகா(26). இவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில், “காளப்பட்டியைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கும், எனக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறோம்.

இந்நிலையில், கோவில்பாளையம் காவல் நிலையத்தில், இருந்து தலைமைக்காவலர் மூர்த்தி என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். என் கணவர் சாணிபவுடர் குடித்துவிட்டதாக முதலில் கூறிய அவர், பின்னர் அவரைக் காணவில்லை. அதற்கு நான்தான் காரணம் என்றும், என் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறி மிரட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விசாரணையில், மேனகாவை தலைமைக்காவலர் மிரட்டியது உறுதியானது. இதைத் தொடர்ந்து தலைமைக் காவலர் மூர்த்தியை ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றி, காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.