ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’நீலப் புலிகள் அமைப்பு சார்பில் 2019 ஜூன் 5-ல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜசோழன் வரலாறு தொடர்பாக சில தகவல்களைக் குறிப்பிட்டேன். டெல்டா பகுதிகளில் நிலமற்ற மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து உமர் ஃபாரூக் எழுதிய, ’செந்தமிழ் நாட்டுச் சேரிகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததைத் தெரிவித்தேன்.

பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களையே நான் பொதுக் கூட்டத்தில் பேசினேன். நான் பேசிய தகவல்களை பலரும் பேசியுள்ளனர். ஆனால், எனது பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டது. நான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை.

எனது பேச்சு எந்த சமூகத்திற்கு எதிராகவும் இல்லை. எனவே என் மீது திருப்பனந்தாள் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.’’

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சித் மீதான வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.