அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில் பொறியியல் இடங்களுக்கான கலந்தாய்வில், செப்.18ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆணையை வழங்குவார் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

”பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களைக் காட்டிலும் வந்துள்ள விண்ணப்பங்கள் குறைவாகவே உள்ளதால் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்தக் கலந்தாய்வில் செப்.18ஆம் தேதி தமிழக முதல்வர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆணையை வழங்குவார்.

5 முறை கலந்தாய்வு

ஆண்டுதோறும் பொறியியல் கலந்தாய்வு ஒரே ஒருமுறை நடந்து வந்ததால் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கடந்த ஆண்டு சுமார் 700 இடங்கள் காலியாக இருந்தன. ஏனெனில் பொறியியல் இடத்தைத் தேர்வு செய்த மாணவர்கள் சிலர் மருத்துவம் உள்ளிட்ட பிற படிப்புகளுக்குச் சென்றுவிடுகின்றனர். இதனால் இந்த காலியிடங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க 5 முறை கலந்தாய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சான்றிதழைச் சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் 3290 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. அவர்களுக்குத் தனியாக கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்பில்லை.

பொறியியல் படிப்புக்காக அரசுப் பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 161 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பதற்கான இடங்கள் கிடைக்கும். அதன்படி சுமார் 11 ஆயிரம் பேருக்கு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அண்மையில் திமுக அரசு அறிவித்த புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அடுத்த ஆண்டில் இருந்து தொடங்கப்பட்டு நடைபெறும். இந்த ஆண்டிலேயே கல்லூரிகளைத் தொடங்குவது நடைமுறையில் சாத்தியமில்லை”.

இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.