கோயில்களில் பெயர்களில் தனிநபர்கள் நடத்தி வரும் இணையதளங்களை முடக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”தருமபுரம் ஆதீனத்தின் கீழ் உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் வைத்து அறுபதாம் கல்யாணம் நடத்த கோயில் நிர்வாகம் ரூ.2 ஆயிரம் மட்டும கட்டணம் வசூலிக்கிறது. இந்தக் கோயில் பெயரில் தனி நபர்கள் பலர் இணையதளம் தொடங்கி, அறுபதாம் கல்யாணத்துக்கு ரூ.2 முதல் ரூ.4 லட்சம் வரை கட்டணம் வசூலித்து மோசடி செய்கின்றனர்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் பெயரில் தனி நபர்கள் நடத்தி வரும் அனைத்து இணையதளங்களை முடக்கவும், கோயில் சொத்துகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று பிறப்பித்த உத்தரவு: ”கோயில்கள் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்தக்கூடாது. கோயில் பெயரில் இணையதளம் நடத்துவோர் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். கோயில்கள் பெயர்களில் நடத்தப்படும் இணையதளங்களை உடனடியாக முடக்க வேண்டும். அந்த நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.