தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தக் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

”தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவிக் காலம் 2016 அக்டோபர் 24-ம் தேதி காலியானது. அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி நிர்வாகங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடத்தவில்லை. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.”

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ”மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம் 4 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார். இதையடுத்து மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.