’தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி மாறினால் வீடு தேடி வந்து வெட்டுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய சாத்தூர்’ அதிமுக ஒன்றியச் செயலர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.

சாத்தூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதிமுககிழக்கு மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.வழக்கறிஞர் பிரிவு மாவட்டச்செயலர் கிருஷ்ணன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியச் செயலர் தங்கவேலு, ராஜபாளையம்கிழக்கு ஒன்றியச் செயலர் மாரியப்பன், முன்னாள் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன், நகரச் செயலர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சாத்தூர் கிழக்கு ஒன்றியச்செயலர் சண்முகக்கனி பேசும்போது, ‘அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்துவிட்டு எந்தக் கவுன்சிலராவது கட்சி மாறினால் அவனை வீடு தேடி வந்து வெட்டுவேன். மாவட்டச் செயலரிடம் சொல்லிவிட்டும் வெட்டுவேன். என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும். கட்சியில் ஜெயித்துவிட்டு எவனாவது கட்சிமாறிப் போனால் உங்க போஸ்ட்மார்ட்டம் ஜி.ஹெச்-ல்தாண்டா’ எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து சார்பு ஆய்வாளர் பாண்டியனின் புகாரின்பேரில் அதிமுக சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலர் சண்முகக்கனி மீது சாத்தூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.