கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக இன்று (பிப்.15) உடற்கல்வி ஆசிரியருடன் வந்துள்ளனர்.

போட்டியில் பங்கேற்றுவிட்டு அவர்கள் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கியுள்ளனர்.

உடனடியாக அங்கிப்பவர்கள் மாணவிகள் மீட்பதற்காக தேடியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாயனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை நிலையங்களுக்கு தகவல் அளித்தனர்.

இரு நிலைய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை வீரர்கள் மாயனூர் காவிரி ஆற்றில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மாணவிகளை தேடிய நிலையில் தமிழரசி, இனியா, லாவண்யாவின் உடல்கள் அடுத்தடுத்து சடலமாக மீட்கப்பட்டன. தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் சோபிகாவின் உடலும் மீட்கப்பட்டது. இதில் உயிரிழந்த மாணவிகள் அல்லாத நீரில் மூழ்கிய 3 மாணவிகளை கீர்த்தனா என்ற மாணவி மீட்டுள்ளார்.

இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.