சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக காவல் துறை டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியான உறவு தொடர்பான விவகாரத்தை கையாள்வது குறித்த வழக்குகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. சிதம்பரத்தில் சிறுமி ஒருவருக்கு சிறுவன் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டுவது போன்ற வீடியோ வெளியானது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் தருமபுரியில் நடைபெற்ற இளம் வயது திருமணம் தொடர்பான வழக்கு ஆகியவை திங்கள்கிழமை இந்த அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, சிதம்பரத்தில் சிறுமிக்கு மஞ்சள் கயிறு கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அந்த வழக்கை முடித்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தருமபுரி இளம் வயது திருமணம் தொடர்பான வழக்கில் 17 வயதுக்குட்பட்ட இருவரையும் காவல் துறையினர் நடத்திய விதம் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களை குழந்தைகளாக கருத வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை செய்யப்படுவதைத் தவிர்க்க உத்தரவிட வேண்டும் என தமிழக காவல் துறை டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆண்மைத்தன்மை, கன்னித்தன்மை சோதனைகளின்போது அறிவியல் தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.