கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியத்தை பெற, கூட்டு வங்கிகணக்கு அவசியமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் இறக்க நேரிட்டால், அவரது ஓய்வூதியம் அவரது வாழ்க்கைத் துணைக்கு கிடைக்கும். அதைப் பெற வாழ்க்கைத் துணையுடன் கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருப்பது தற்போது கட்டாயமாக உள்ளது. ஆனால், சில ஓய்வூதியர்கள் பல்வேறு காரணங்களால் இந்தக் கூட்டு வங்கிக் கணக்கை தொடங்குவதில்லை. இதனால் அவர் இறந்த பிறகு, அவரது வாழ்க்கை துணைக்கு ஓய்வூதியம் கிடைப்ப தில் சிக்கல் ஏற்படுகிறது.

இதுகுறித்து ஓய்வூதியத் துறை உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய பிறகு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள், சில நேரங்களில் கூட்டு வங்கிக் கணக்கை தொடங்க முடியாமல் போய் விடுகிறது. எனவே,கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குவதை கட்டாயமாக்கக் கூடாது என ஓய்வூதியத் துறையிடம் வலியுறுத்தினோம். இதனை அவர்களும் ஏற்றுக் கொண்டனர். அதேநேரம், கூட்டு வங்கிக் கணக்கில்ஓய்வூதியம் பெற்று வருவோரை, தனிக் கணக்கு தொடங்குமாறு வலியுறுத்தக் கூடாது என வங்கிகளை அறிவுறுத்தியுள்ளோம். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.