காத்மாண்டு: நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினி சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று நேபாளம் சென்றுள்ளார். நேபாளத்தில் புத்தர் பிறந்த லும்பினி சென்றடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் துபா வரவேற்றார். பின்னர் லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் அமைந்துள்ள மாயதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

மாயதேவி ஆலய தரிசனத்துக்கு பிறகு அருகே உள்ள புத்த துறவிகள் மடத்துக்கு பிரதமர் மோடி செல்கிறார். புத்த கலாசார பாரம்பரிய மையம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் ஷெர்பகதுர் துபாவும் நீர்மின்சாரம் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கின்றனர்.

இருநாடுகள் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. லும்பினி புத்த பல்கலைக்கழகம், திரிபுவன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இந்திய கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை தலா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. காத்மாண்டு பல்கலைக்கழகத்துடன் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறது.

இதுதவிர, சென்னை ஐ.ஐ.டி. மற்றும் நேபாள கல்வி நிறுவனங்கள் இடையே 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. புத்த ஜெயந்தியை முன்னிட்டு, நேபாள அரசு ஏற்பாடு செய்துள்ள கொண்டாட்டத்தில் நேபாள பிரதமருடன் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்கு அவர் புத்தரின் சிறப்புகள் பற்றி பேசுகிறார்.