உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க ரூ.3.26 கோடி செலவு ஆனதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் காரணமாக அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு ‘ஆபரே‌ஷன் கங்கா’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க எம்.பி.க்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை முதல்வர் அமைத்தார். இந்தக் குழுவில் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கலாநிதி வீராசாமி எம்.பி. எம்.எம்.அப்துல்லா எம்.பி. மற்றும் ஜெசிந்தா உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் டெல்லியில் தங்கி தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்படி 1,457 தமிழக மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர். இந்நிலையில் இந்தப் பணிகளுக்கு ரூ.3.26 கோடி செலவு ஆனதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பொது ( மறுவாழ்வு ) துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், ” உக்ரைனில் இருந்து வந்த 1,890 மாணவர்களில் 1,524 பேர் அரசு செலவில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.3.5 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.3.26 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.