அடுத்த மக்களவைத் தேர்தலின்போது, துணை பிரதமராக ஆசைப்படும் ஸ்டாலின், அதற்கென புதியகூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக சமூக நீதி என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகசார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நேற்று பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவக் கல்விக்காக 25 ஆயிரத்து 593 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 1806 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டில் 15 ஆயிரத்து 259 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மருத்துவக் கல்விக்காக விண்ணப்பித்தவர்களில் 10 ஆயிரத்து 511 பேர் நீட் பயிற்சி பெற்றுள்ளனர். நீட் பயிற்சி எடுக்கவில்லை என 15 ஆயிரத்து 82 பேர் தெரிவித்து உள்ளனர்.

நீட் தேர்வு குறித்து ஏ.கே.ராஜன் கமிட்டி பொய்யான அறிக்கையை மக்கள் மன்றத்தில் அளித்துள்ளது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது அல்ல. எந்த மாணவரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை.

திமுக தலைவர்கள் மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதால், அவர்கள் மட்டுமே நீட் தேர்வை எதிர்க்கின்றனர். மீண்டும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால், அதனால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை. அதிமுக, பாஜக பங்கேற்காத கூட்டத்தை அனைத்துக் கட்சி கூட்டம் என்று சொல்ல முடியாது.

2024 மக்களவைத் தேர்தலில் துணை பிரதமராக வர வேண்டும் என்ற ஆசை ஸ்டாலினுக்கு உள்ளது. அதற்காக புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அகில இந்திய அளவில் சமூக நீதி என்ற பெயரில் புதிய நாடகம் நடத்துகிறார்.

கடந்த 8 மாத காலத்தில் தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. ஊழல் இல்லாத உள்ளாட்சி பிரதிநிதிகள் வேண்டுமென்றே பாஜக களம் காணுகிறது என்றார்.