கடம்பூர் பேரூராட்சியில் நடந்த 9 வார்டுகளுக்கான தேர்தலில் 8 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் உள்ள 1, 2, 11-வது வார்டுகளில் தலா ஒருவரது மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. மீதமுள்ள 9 வார்டுகளில் 23 பேர் களத்தில் இருந்தனர். 1-வது வார்டு எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, 2-வது வார்டு நா.ராஜேஸ்வரி, 11-வது வார்டு வெ.சிவக்குமார் ஆகியோர் மட்டுமே களத்தில் இருந்த நிலையில், அவர்கள் 3 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படாததால் அவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடம்பூர் பேரூராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் தேர்தல் ரத்து என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், 1, 2, 11-வது வார்டு சுயேச்சை வேட்பாளர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், 1, 2, 11-வது வார்டுகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் நாகராஜா, ராஜேஸ்வரி, சிவக்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும். மற்ற 9 வார்டுகளுக்கும் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்திருந்த அதே வேட்புமனுக்களை கொண்டு, 2 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடம்பூர் பேரூராட்சி தேர்தல் செப்.29-ம் தேதி நடைபெறும் என கடந்த 21-ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடம்பூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் ஏ.எஸ்.அபுல்காசிம் நியமிக்கப்பட்டார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தனசிங், ஜஸ்டின் செல்லதுரை ஆகியோர் செயல்படுகின்றனர். மேலும், கடந்த 21-ம் தேதி மாலையே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, நா.ராஜேஸ்வரி, வெ.சிவக்குமார் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான தேர்தல் கடந்த 29-ம் தேதி நடந்தது. இதில், 9 வாக்குச்சாவடிகளில் 775 ஆண் வாக்காளர்களும், 823 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1598 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்திருந்தனர். இது 64.69 சதவீதமாகும்.
அதிமுக, அமமுக பங்கேற்காத தேர்தல்
கடம்பூர் பேரூராட்சியில் திமுக கூட்டணியில் நேற்று நடந்த 9 வார்டுகளுக்கான தேர்தலில் திமுக 7 இடங்களிலும், காங்கிரஸ், மதிமுக தலா ஒரு இடத்தில் போட்டியிட்டன. பாஜக ஒரு இடத்தில் களம் கண்டது. சுயேச்சை வேட்பாளர் கு.ஜெயசித்ரா 5, 6-வது வார்டுகளில் போட்டியிட்டார். ஆனால், தொகுதியை தன்னிடம் வைத்துள்ள அதிமுகவும், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தை தன் வசம் வைத்துள்ள அமமுகவும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.