நியாயவிலை கடைகளில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும்  4 மாதங்களுக்கு நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், நியாயவிலை கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்குவது தொடரும் என தெரிவித்தார். 80 கோடி ஏழை மக்களுக்கு மாதம் 5 கிலோ தானியம் வழங்கும் திட்டம் அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை தெரிவித்திருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது. இதன்கீழ், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

முதலில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி, வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இப்பணி நீட்டிக்கப்படாது என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில், இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும்  4 மாதங்களுக்கு நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.