நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்துதெரிவித்தார். இந்த நிகழ்வின்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்திசாரதி உட்பட பலர் உடனிருந்தனர்.

பிறகு நடந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசுபோது,‘‘தேமுதிக தனித்து போட்டியிட்டதால், மக்களிடம் முரசு சின்னம்சென்றடைந்துள்ளது. இளைஞர்களை அதிகமாக கொண்ட கட்சியாக தேமுதிக இருக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடவேண்டும். அதிகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 2024 தேர்தலில் வெற்றி என்ற இலக்கை திட்டமிட்டு, தற்போது இருந்தே பணியை தொடங்க வேண்டும்’’ என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பண பலம், ஆட்சி பலம் எல்லாவற்றையும் தாண்டி தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலைப் பொறுத்தவரை எல்லாமே ஏற்கெனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. உண்மையாக ஜனநாயக ரீதியில் இனி தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகமே. இனியாவது நியாயமான முறையில் தேர்தல் நடத்தவேண்டும். ஆளும் கட்சி, ஆண்டகட்சி, மத்தியில் உள்ள கட்சி எனஅனைவரும் வாக்குக்கு காசு கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு மக்களுக்கு தேர்தலின் மீதான நம்பிக்கை குறைந்ததே காரணம். பொதுமக்களுக்கு தேர்தல் மீதே நம்பிக்கை போய் விட்ட காரணத்தால்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது” என்றார்.