தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் அரசுப் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா சாதனை அல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் நடந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவியை இன்று (7-ம் தேதி) அவர் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர் அருகே களிமேட்டில் பழமை வாய்ந்த அப்பர் மடம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த மடத்தில் அப்பர் சதயவிழா தேர் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி கடந்த ஏப்.27-ம் தேதி இரவு நடந்த தேர்த் திருவிழாவில் சாலையில் தேர் திரும்பும்போது மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் தேரின் அலங்கார வளைவு உரசியதால் மின்சாரம் பாய்ந்து தேர் தீப்பிடித்து எரிந்ததில், 11 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்து, களிமேடு கிராமத்துக்கு வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதே போல் அதிமுக சார்பில் விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று முற்பகல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமானம் வாயிலாக திருச்சிக்கு வந்தனர். பின்னர் சாலை மார்க்கமாக தஞ்சாவூர் களிமேடு கிராமத்துக்கு வந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தேர் விபத்து நிகழந்த இடத்தை பார்வையிட்டார். மேலும், அதிமுக சார்பில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கினார்.

 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”களிமேடு தேர் விபத்தில் இறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் வீடு இல்லாமல் யாராவது இருந்தால் அவர்களுக்கு அரசே வீடு வழங்க வேண்டும். இறந்த குடும்பத் தலைவர்களின் வாரிசுகள் கல்விச் செலவை முழுமையாக அரசு ஏற்க வேண்டும்.

தேர் செல்லும் பாதையில் சாலைகள் மேடு பள்ளங்கள் உள்ளதா என கண்காணிக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. தேரோட்டம் முடியும் வரை மின் இணைப்பை துண்டித்திருக்க வேண்டும். இந்த விபத்தின்போது கவனக்குறைவாக இருந்த அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்து குறித்து அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழு பாகுபாடில்லாமல் விசாரிக்க வேண்டும்.

திமுக ஓராண்டு ஆட்சி என்பது தோல்வி அடைந்துள்ளது. எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுக ஓராண்டு ஆட்சி பாஸ் மார்க் வாங்க வில்லை. பெயில் மார்க் தான் வாங்கியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் அரசுப் பேருந்தில் பயணம் செய்வது என்பது உலக மகா சாதனை அல்ல. தமிழகத்தில் திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மின்வெட்டு வரும் என்பது கடந்த கால வரலாறு” என்றார்.

அவருடன் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.