இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அலுவலர் பயிற்சிக்காக (Apprentice Development Officer) நாடு முழுவதும் உள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எல்.ஐ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தென் மண்டலத்தில் மட்டும் 1,516 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முக்கிய தேதிகள்: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் வழங்கப்படவில்லை என்பதால் கவனமாகப் பிழையின்றி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இணைய வழியில் நடைபெறும் தேர்வுகளில் மார்ச் 12ஆம் தேதி முதல் நிலை தேர்வும், ஏப்ரல் 8ஆம் தேதி முதன்மைத் தேர்வும் நடைபெற உள்ளது.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சிக் காலத்தில் மாதத்துக்கு ரூ. 51,500 உதவித்தொகையாக வழங்கப்படும். பயிற்சியை அடுத்து வளர்ச்சி அலுவலர் பதவி வழங்கப்படும். அந்தப் பணிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும் எனவும் எல்.ஐ.சி. அறிவித்துள்ளது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியம். மேலும், அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். இது குறித்த விரிவான தகவல்களுக்கு எல்.ஐ.சி. இணையதளத்தைப் பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: எல்.ஐ.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களைச் சரியாகப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750ஐ செலுத்த வேண்டும். பட்டியல், பழங்குடி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தென் மண்டலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான பயிற்சிகள் சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வழங்கப்படும். விண்ணப்பதாரர் இதில் ஏதேனும் ஒன்றை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு முறை: முதல் நிலைத் தேர்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்படுவோர் முதன்மைத் தேர்வுக்கும், அதனையடுத்து நேர்முகத் தேர்வுக்கும் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.