வடகொரியா மீண்டும் ஒருமுறை ஏவுகணை பரிசோதனை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நாவுக்கான சீன தூதர் ஜாங் ஜுன் கூறும்போது, ‘வடகொரியா மீண்டும் ஒரு புதிய அணுசக்தி சோதனையை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அணு ஆயுத ஒழிப்பு என்பது சீனாவின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும்.

நாங்கள் வடகொரியாவிம் மற்றொரு சோதனையை பார்க்க விரும்பவில்லை. என்ன நடக்கும் என்று பொறுந்திருந்து பார்ப்போம். ஆனால், என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன்,

மேலும், வடகொரியா மீதான ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை தளர்த்தவும், தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்தவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

வடகொரியா கடந்த ஜனவரி மாதம் ஏவுகணை பரிசோதனை ஒன்றைச் செய்தது. 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்தது.

வடகொரியாவின் அச்சமூட்டும் செயல்பாடுகள் கவலையை அளித்திருப்பதாக அண்டை நாடுகளான தென் கொரியாவும், ஜப்பானும் தெரிவித்துள்ளன.

கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.