தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ‘பொய்யை பரப்புகிற நபருக்கு மத்திய அமைச்சர்கள் வக்காலத்து வாங்குகின்றனர்’ என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதில் அளித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மதுரை எம்.பி. வெங்கடேசன் குறித்து தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா அவதூறு பேசியதாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கண்டனப் பதிவில், “தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றுக்காக நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவர் கைது கண்டனத்துக்குரியது.

மலக்குழி மரணங்களின் மீது முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல், அதைப் பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சி எடுப்பது நியாயமா? உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு இப்போது முக்கியமான சமூகப் பிரச்சினையில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பாஜக தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்துப் போராடுவோம்’’ என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பொய்யை பரப்புகிற நபருக்கு மத்திய அமைச்சர்கள் வக்காலத்து வாங்குவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதியமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர்.

மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி. மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட இயந்திர பயன்பாட்டைக் கொண்டுவர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய மத்திய அரசின் முக்கியத் துறை அமைச்சர்கள் சமூக வலைதளத்தில் பொய்யை, பீதியை பரப்புகிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழித்து வக்காலத்து வாங்குவது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்துக்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டுகிறது.

பிரச்சினை என்ன? – “மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது. கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது. சு.வெங்கடேசன் MP கள்ளமெளனம் காக்கிறார்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஒரு நிதியமைச்சருக்கு அப்படி ஒரு பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கிறதா என்று கூட பார்த்து விட்டு கருத்துக் கூற முடியாதா? இன்னொருவர் தகவல் தொழில் நுட்ப அமைச்சர். அந்த இலாகாவை “பொய் மற்றும் அவதூறு தகவல் தொழில் நுட்ப அமைச்சர்” என்று மாற்றி விடலாமா?

முழுவதும் வதந்தியால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செய்தியை சுற்றுக்கு விடுவது சமூகப் பதற்றத்தை உருவாக்கும் என்பதுதான் பிரச்சினை. ஆகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது.

இதில் வேடிக்கை என்னவெனில், கருத்து சுதந்திரம் பற்றி மத்திய அமைச்சர்கள் பேசி இருப்பதுதான். உலகில் “இணையதள முடக்கம்” செய்வதில் ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இந்தியாவை வைத்திருப்பவர்கள். கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மிதந்தபோதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப் படாதவர்கள் ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக வருவதுதான் நகை முரண். பொய் உங்கள் ஆயுதம். உண்மையே என்றும் எங்களின் கவசம்” என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

எஸ்.ஜி.சூர்யா கைது ஏன்?

முன்னதாக, ‘மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினர் விசுவநாதன் மலம் கலந்த நீரில் இறங்கி கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதன் காரணமாக உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று பின்னர் சிகிச்சைப் பலனின்றி தூய்மைப் பணியாளர் ஒருவர் இறந்துள்ளார்’ என்று தெரிவித்து, ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் பறிபோன தூய்மை பணியாளர் உயிர் – கள்ள மெளனம் காக்கும் புரச்சீ போராளி மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!’ என்று எஸ்.ஜி.சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லை என்றும், அது அவதூறு செய்யும் நோக்கிலான போலி செய்தி என்றும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.