சீமான் | கோப்புப்படம்
சீமான் | கோப்புப்படம்

சென்னை: “இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின் இவ்வறிவிப்புத் தோன்றுகிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறையின் அறிவிப்பு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் புகைப்படத்தையே நீதிமன்றங்களில் வைப்பதை தவிர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின் இவ்வறிவிப்புத் தோன்றுகிறது.

சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும். அவர் வகுத்தளித்த அரசியலைப்பு சட்டத்தின் ஆட்சி இந்த நாட்டில் நடைபெறும் வரை, அண்ணல் அம்பேத்கர் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும், எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அண்ணல் அம்பேத்கரின் பெயரையோ, புகழையோ எவராலும் மறைக்க முடியாது.

ஆகவே, சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறையின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, ஆலந்தூரில் கட்டப்பட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் உருவப்படங்களை அகற்றுமாறு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவுத் துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.