கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளைப் பெறும் வகையில், உரிய முறையில் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களுக்கு, கரோனாவால் உயிரிழந்தார் எனச் சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளைப் பெற இயலவில்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த மனுவில், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு உரிய முறையில் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று (ஜூலை 08) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு, கரோனா காரணமாக உயிரிழந்ததைக் குறிப்பிட்டு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளைப் பெறும் வகையில், உரிய முறையில் இறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 10 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.